Tuesday, June 10, 2008

Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-2

அன்று ஆபிரகாம் லிங்கன்! இன்று பாரக் ஒபாமா!

மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வ காட்சிகள் அமெரிக்க அரசியல் அரங்கில் நடப்பதையும், 1966 ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் மனதிšல் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்த "மனிதன்" எனும் புதினமும், அதனால் அவர் தம்பிக்குத் தீட்டிய மடல்களையும் பற்றிக் கடந்த வாரம் கூறினேன். பத்து மாதங்களுக்கு மு‹ன்னர், இவரா? இந்தக் கருப்பரா? அதிலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முயல்வதா?

கேள்விக்குறியாக இருந்த பாரக் ஒபாமா, இன்று ஆச்சரியக்குறி ஆகிவிட்டார். இப்படியும் நடக்குமா? நம்ப முடியவிšலையே! ஏதோ போட்டிக்கு முயற்சிக்கிறார் ஜனநாயகக் கட்சியிšன் எட்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகையிலே அதிபராக இருந்த விவிலியம் ஜெபர்சன் கிளிண்டனின் துணைவியார், நியூயார்க் நகரில் புகழ்மிக்க செனட்டர் ஹிலாரி ரோதம் கிளிண்டன்தான், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது முடிந்துபோன முடிவு ஆயிற்றே! அமெரிக்க நாட்டி‹ல் குடியரசுத் தலைவராகப்போகும் முதல் பெண்மணி - அதுவும் ஒரு புதிய திருப்பம் - ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இருந்தாலும், இந்தக் கருப்பு இளைஞர், போட்டிப் பந்தயத்தில் நுழைவதே பெரிது அ‹ன்றோ! பரவாயிšலை. ஓரளவு ஓட்டுக்களும் கிடைக்கும் என்ற ஆருடங்கள் எல்லாம், பொடிப்பொடியாகிறன.

இதோ நெருங்கி வந்துவிட்டார்; இடைவெளி குறைகிறது; அடடா, முந்துகிறாரே; கருப்பர்கள் அதிகம் உள்ள மாநிலம் அல்லவா -அதுதான்போலும்; இல்லையில்லை, வெள்ளையர்கள் பெரும்பாலான மாநிலத்திலும் சமபலம். அடடா, என்ன ஆச்சரியம்! அங்கும் அலவா முந்துகிறார்!

பேச்சு ஆற்றலால், வரலாற்றின் போக்கை மாற்றியவர்கள் பலர் உண்டு, பல்வேறு நாடுகளில்! 1917. போஸ்விக்குகள், ரஷ்யாவில் வெறிகண்ட புரட்சியில் பெரும்பங்கு வகித்தது, லியான் ட்ராட்ஸ்கியின் பேச்சு ஆற்றல்தான். அதைப் பாராட்டிப் பரவசம் உற்றவர் மாமேதை லெனின். இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியக் குண்டுவீச்சால் இடிபாடான லண்டனில், அச்சம் இன்றி ஆபத்தை எதிர்கொளும் துணிச்சலைத் தன்னாட்டு மக்களுக்குத் தந்தது சர்ச்சிலின் பேச்சு ஆற்றல்.

சைமன் பொலிவரின் பேச்சுகள், பொலிவியாவின் சரித்திரத்தை மாற்றியது. ஏன், அமெரிக்க நாட்டில், பகுத்தறிவுச் சுடராய் எழுந்த ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் பேச்சுகள், பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது உண்டு. கருப்பர்களின் விடிவெளியாக முளைத்த மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை, தாமஸ் ஜெபர்சனின் எண்ணங்களை, வசீகரிக்கும் கென்னடியின் வாதத் திறமையை, தன் உரைகளில் மிளிரவைக்கும் வித்தகராக அன்றோ இந்தக் கருப்பு இளைஞன் மேடையில் நிற்கிறான்.

அதிகமாக அறிமுகம் இல்லாத, இலினாய்ஸ் மாநிலத்துக்கு உட்பட்ட ஒரேயொரு கருப்பு இன செனட் உறுப்பினராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய ஒரேயொரு உரையின் மூலம், அனைவர் உள்ளங்களையும் வென்றார். என்ன அருமையாகப் பேசுகிறார்! பேச்சைக் கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன - மறக்க முடியவில்லை. இன்னும் அந்த மயக்கத்தில் இருக்கிறேன் என்று பேசத் தொடங்கினார்கள். ஊரெங்கும், நாடெங்கும் இதே பேச்சு. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதத் தொடங்கின. தொலைக்காட்சி நிறுவனங்கள் தேடிவந்து பேட்டி கண்டன.

இதே இலினாய்ஸ் மாநிலத்தில் இருந்துதான், ஆபிரகாம் லிங்கன் செனட்டராக இருந்தார். தனது அற்புதமான பேச்சு ஆற்றலால், எதிரிகளை வென்றார்; வேட்பாளர் ஆகவும் களத்தில் நின்றார்; குடியரசுத் தலைவரும் ஆனார். கருப்பர்களின் அடிமை விலங்கை உடைக்கப் பட்டயம் தீட்டியதால் ஆவியும் தந்தார்.

பாரக் ஒபாமாவா? அவருக்கு அனுபவம் கிடையாதே? அவர் எப்படி அதிபர் ஆக முடியும்? எப்படி இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்? என்று, கிளிண்டனின் வட்டாரம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தது. சிகாகோவி‹ பிரபலமான ஏடு ஒன்று, அதுபற்றி வெளியிட்ட கருத்துப் படம், அமெரிக்கா முழுமையும் பேசப்பட்டது. இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகளான சிறுமிகள், ஆபிரகாம் லிங்கனின் படத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைப் போல அக்கருத்துப்படம். "அனுபவம் இல்லாத ஒரு வழக்கறிஞரை இங்கிருந்துதான் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினோம்; நாட்டுக்கு நன்மையாக முடிந்தது. இப்பொழுதும் அதுபோல் ஏன் நடக்கக்கூடாது?" என்பது அதன் பொருள். வாயடைத்துப் போயிற்று கிளிண்டனின் வட்டாரம்!

சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க ஊடகங்களில், ஏடுகளில், பரபரப்பாக இடம்பெற்ற பாரக் ஒபாமா பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. உலகின் எந்த மூலையிலே பிறந்தாலும், ஒருசிலர் கண்டங்களைக் கடந்து மக்களை ஈர்க்கிறார்கள். அறிவால், ஆற்றலால், காந்தமென வசீகரிக்கும் பேச்சால் கவருகிறார்கள்.

சி.என்.என் தொலைக்காட்சியில் ஒபாமாவின் பேச்சைக் கேட்ட நான், தானாகவே அவரது பற்றாளன் ஆகிவிட்டேன். ஐம்பதுகளில், அறுபதுகளில், அறிஞர் அண்ணா தன் பேச்சால், செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், இதயங்களை வென்றதுபோல், இந்த நீக்ரோ இளைஞரும், ம்னித மனங்களைத் தன் பக்கம் அள்ளுகிறார். கருப்பர்கள் மட்டும் அன்றி வெள்ளையர்களும், அதிலும் குறிப்பாக வாலிப வயதினர் அவர் பேச்சில் சொக்கிப் போகிறார்கள்.

"நான் ஒபாமாவின் பேச்சைக் கேட்டேன். அன்று முதல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என் நெஞ்சிலும், செவியிலும் அந்தக் குரலே ரீங்காரமிடுகிறது" என்ற பேச்சு எங்கும் எழுந்தவண்ணம் உள்ளது. பாரக் ஒபாமாவின் சிந்தனை, எல்லை கடந்தது, ஆகாயம் நிகர்த்தது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் என்னை ஊக்குவிக்கும் மாமனிதர் என்கிறார் ஒபாமா.

உலகில் சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பதைக் காந்தியாரது வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. அதனால்தான், மகாத்மா காந்தியின் படத்தைத் தனது செனட்டர் அலுவலகத்தில் தொங்கவிட்டு இருப்பதாக ஒபாமா கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி. 5000 கோடி ருபாய் மதிப்புள்ள அமெரிக்கப் போர் விமானம், 6000 கடல்மைல்கள் இடைவிடாது பறந்து தாக்கும் சக்திவாŒய்ந்த விமானம், நடுவானிšல் வெடித்துச் சிதறியது. ஆனால், அதில் இருந்த இரண்டு விமானிகளும், பாரசூட் மூலம் குதித்துத் தப்பினார்கள். திகைப்பூட்டும் ஆச்சரியம்! ஆனால், அதையும்விட, அதிசயமான ஆச்சரியம்தான் பாரக் ஒபாமாவின் பிரவேசம். வெள்ளையர் உள்ளம் கவர் கள்வனாக, நாடு நகரமெங்கும் அவர் உலா வரும் காட்சிகள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போது ஆண்டு கொண்டு இருக்கிற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார்? ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கு, அந்தக் கட்சிகளுக்கு உள்ளேயே நடக்கும் வேட்பாளர் தேர்ததான், இதற்கு முன் எந்தக் காலத்திலும் ஏற்பட்டு இராத பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அங்கு மட்டும் அன்றி, அகிலம் முழுமையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிலும், குறிப்பாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுதான், இன்று உலகெங்கும் விவாதிக்கப்படும் பொருள் ஆகிவிட்டது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போது செனட்டராக உள்ள ஜான் மெக்கெய்ன்தான் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ முடிவு ஆகிவிட்டது. இவர் வியட்நாம் போரில், சாகசம் புரிந்தவராக, ஆறு ஆண்டுகள் அங்கு சிறையில் சித்திரவதைக்கு உள்ளானபோதும், பிற கைதிகளுக்கு முன்னதாக விடுதலைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் நிராகரித்த துணிச்சல்காரராகவும், புகழ் பெற்றவர். இவரை எதிர்த்து வெல்வதற்கு, தகுதியானவர் ஹிலாரி கிளிண்டன்தான் என்று, கடந்த ஆண்டு நவம்பர் வரையிலும் கருதப்பட்டார். ஆனால், களத்தில் பெரும் புயலாகப் பிரவேசித்த பாரக் ஒபாமா, எவரும் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

நேற்று வரை ஹிலாரியை ஆதரித்தவர்கள், இன்று திடீரென்று, பாரக் ஒபாமா பக்கம் சாய்கிறார்கள். இந்த விந்தைமிக்க மாற்றம், அனைத்துத் தரப்பினரிடமும் பரவுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை, ஹிலாரியை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், 'அனைவருக்கும் சம உரிமைகள்' போராட்ட நாயகனுமான ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜான் லீவிஸ், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல; வேட்பாளரைத் தேர்ந்து எடுக்கும் கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகளுள் (Super Delegate) ஒருவரும் ஆவார். அவர் பிப்ரவரி 28 ஆம் நாள், வாசிங்டனில் செய்த அறிவிப்பு, ஹிலாரி வட்டாரத்தை அதிர்ச்சிக்கும், ஒபாமா வட்டாரத்தை ஆச்சரியத்துக்கும் ஆளாக்கியது.

அவர் சொன்னார்: "அமெரிக்காவில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 1968 இல், தேர்தல் களத்தில், ராபர்ட் கென்னடி போட்டியிடத் தயாரான காலத்துக்குப் பின்னர், இத்தனை ஆண்டுக்காலமும் நான் பார்த்திராத, ஒருவிதமான பேரார்வம், ஒருவிதமான இயக்கம், ஒருவிதமான உள்ளுணர்ச்சி, அமெரிக்க மக்களின் எண்ணங்களில், இதயங்களில், ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியலில், ஒரு புதிய விடியலை மக்கள் தேடுகிறார்கள். அந்த மாற்றத்தின் அடையாளமாகவே, செனட்டர் பாரக் ஒபாமாவை அவர்கள் காண்பதாக நான் கருதுகிறேன். அதனால், நானும் பாரக் ஒபாமாவையே ஆதரிக்கிறேன்".

ஹிலாரியின் கூடாரத்தில் இருந்தே இப்படி ஒரு அறிவிப்பு வந்ததைக் கண்டு, பாரக் ஒபாமா கூறும்போது, " மனித உரிமை இயக்கத்தில் மாபெரும் தலைவரான ஜான் லீவிஸ், அமெரிக்க மக்களால் போற்றப்படுபவர். அவரது ஆதரவு மூலம் எனக்கு மிகப்பெரும் கௌரவத்தைத் தந்து உள்ளார்" என்று குறிப்பிட்டார்.

சூடும் சுவையும் நிறைந்த விவாதப் போட்டி, ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் இடையில், மிக விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆனால், பிப்ரவரி தொடங்கியதற்குப்பின், களத்தில் தான் மோதப் போவது, பாரக் ஒபாமாவுடன்தான் என்று, ஜான் மெக்கெய்ன் முடிவு செய்துவிட்டார் போலும். அதனால், பாரக் ஒபாமா மீதே கணைகளைத் தொடுக்கிறார். விமர்சனங்களை வீசுகிறார். ஹிலாரி கிளிண்டனைப் பற்றிப் பேச்சே இல்லை.

ஈராக் பிரச்சினை குறித்து, ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை, அங்கே அமெரிக்க வீரர்கள் உயிர்ப்பலி ஆவதை, உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து சூழ்வதைக் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கும் பாரக் ஒபாமா, தான் அதிபர் ஆனால், அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து, முதல் வேலையாகத் திரும்பப் பெறுவேன் எனக் கூறி வருகிறார்.

அண்மையில், ஒரு விவாத மேடையில், "ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள், செயல்பட்டால், என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஈராக்கில் அல் கொய்தா தளம் அமைந்தால், அதை நசுக்க அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவேன் என்றார்.

இந்த பதிலுக்கு, விமர்சனமாக ஜான் மெக்கெய்ன், "ஒபாமாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். ஈராக்கில் அல் கொய்தா இருக்கிறது. நாம் வெளியேறினால், அவர்கள் தளம் மட்டும் அமைக்க மாட்டார்கள். அவர்கள் அந்த நாட்டையே கைப்பற்றிக் கொள்வார்கள். அல் கொய்தாவிடம், ஈராக்கை ஒப்படைக்க விரும்புகிறார் ஒபாமா" என்றார்.

மெக்கெய்ன் சொன்ன சில மணி நேரத்துக்கு உள்ளாக, பதிலடியாக, பாரக் ஒபாமா கூறுகையில், "ஜான் மெக்கெய்னுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். ஜார்ஜ் புசும், ஜான் மெக்கெய்னும் ஈராக்கில் படையெடுப்பதற்கு முன்பு அங்கு அல் கொய்தா கிடையாது. ஆபத்தை விதைத்ததே இவர்கள்தாம்" என்றார்.

அமெரிக்க இதயங்களையும், ஊடகங்களையும், வேகமாகப் பற்றிப் படர்ந்துவரும் பாரக் ஒபாமாவுக்குத் திரண்டு வரும் ஆதரவு, மந்திரமா? மாயாஜாலமா? காரணம் தேட முடியாத அற்புதமா? பெரும் புதிராக இருக்கிறார். எப்படிப் பெருகியது இந்த ஆதரவு? எவ்விதம் நாலுகால் பாய்ச்சலில் தாவி வளருகிறது? என்பதைக் கணக்கில் எடுப்போம்.

இந்த ஆண்டு, ஜனவரி மூன்றாம் நாள்தான் முதன்முதலாக அயோவா மாநிலத்தில், வேட்பாளருக்கான தேர்தல் நடந்தது. கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் அன்றி, மற்றவர்களும் வாக்கு அளிக்கின்ற காகஸ் (Caucus) தேர்தலில், பாரக் ஒபாமாவுக்கு 38 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஹிலாரி கிளிண்டனுக்கு 29 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. இதனைப் பெரிதாகக் கணக்கில் கொள்ளாத ஹிலாரி முகாம், அலட்சியம் செய்தது. ஐந்து நாட்கள் கழித்து, நியூ ஹேம்ப்சயர் மாநிலத்தில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் பிரைமரி தேர்தலில் , ஒபாமாவுக்கு 37, ஹிலாரிக்கு 39 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

ஜனவரி 19 ஆம் நாள் நெவேடா மாநில காகஸ் வாக்குப்பதிவில், ஒபாமாவுக்கு 45, ஹிலாரிக்கு 51 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. ஆனால், ஜனவரி 26 ஆம் நாள், தெற்கு கரோலினா மாநில பிரைமரி தேர்தல், ஹிலாரிக்குப் பலத்த அதிர்ச்சியைத் தந்தது. இங்கு பாரக் ஒபாமா பிரைமரி தேர்தலில் 2,95,091 வாக்குகளும், 55 விழுக்காடு ஆதரவும் பெற்றார். ஹிலாரிக்கு 1,41,128 வாக்குகளும், 27 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பிரதிநிதிகள் கணக்கில், ஒபாமாவுக்கு 25 பிரதிநிதிகளும், ஹிலாரிக்கு 12 பிரதிநிதிகளும் ஆதரவு அளித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவுதான்ன், அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பாரக் ஒபாமாவுக்கு, தெற்கு கரோலினா மாநிலத்தில், அமோகமான ஆதரவு கிடைத்ததை ஏளனம் செய்தும், கிண்டலாகவும், எகத்தாளமாக பில் கிளிண்டன், "இப்படித்தான் இங்கே ஒரு கருப்பு இளைஞன் ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஒருமுறை பிரைமரி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றார். கடைசியில் என்ன ஆனார்? அதுபோலத்தான் இப்போதும் என்று, கருப்பர்கள் அதிகம் வாக்கு அளித்து விட்டார்கள் என்ற பரிகாசத்தின் தொனிதான், மொத்தத்தில் இத்தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

'கருப்பர் இனத்தைப் பாகுபடுத்தி, கொச்சை மொழியில், பில் கிளிண்டன் புண்படுத்திவிட்டார்', என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் கருப்பர்கள் அல்ல; ஜனநாயகக் கட்சியில் உள்ள வெள்ளை இனத்தவர். அதிலும், கட்சியின் முன்னணித் தலைவர்கள் வெகுண்டனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் பலமான தூணான எட்வர்டு கென்னடி, இதன் காரணமாகவே பகிரங்கமாக, தான் பாரக் ஒபாமாவை ஆதரிப்பதாக அறிவித்தார். சொற்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.

அதனாšதான், "வார்த்தைகளை அளந்து பேசு; சொற்களைச் சிதறி விடாதே, பிறகு அள்ள முடியாது; வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் என்ன?" என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.

ஒருகாலத்தில், நாய்களை விட, பன்றிகளை விட கருப்பர்கள் இழிவாக நடத்தப்பட்ட அமெரிக்காவில், இன்று எத்தகைய தலைகீழ் மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை, கடந்த 150 ஆண்டுகளில், மனங்களை உலுக்கிய இரண்டு நூல்களைப் பற்றியும், உரிமைக்குப் போராடிய மாமனிதர் மார்ட்டின் லுhதர் கிங் பற்றியும், கண்ணின்மணிகளே, நான் உங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற கடிதங்களில், கருத்து ஓட்டத்தின் உட்பொருளையும், இதிலிருந்தே நீங்கள் உணரலாம்.

கருப்பர் இனம் என்று வேறுபடுத்தும் விதத்தில் ஏளனமாகச் சொன்னதால், வெள்ளை இனத்துக் கட்சித் தலைவர்கள் அதனை வெறுமனே கண்டிக்காமல், ஒபாமாவுக்கு ஆதரவாகக் களத்திலேயே குதித்து விட்டார்கள். அதனால்தான், ‘நடப்பது தலைகீழ் மாற்றம்’ என்றேன்.

திடுக்கிடும் திருப்பமாக, பாரக் ஒபாமாவுக்கு ஆதரவு அலை வீச ஆரம்பித்தது. இது ‘ஒபாமா அலை’ (Obama Wave), என்பதே எங்கும் பேச்சு. ஓங்கி எழும் சாதாரண அலை வீச்சுத்தானா? அல்லது மண்டிலங்களைப் புரட்டிப்போடும் ஆழிப் பேரலையா? என்ற பேச்சும் ஆங்காங்கே ஆரம்பமாயிற்று. பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, வெறும் செவ்வாய்க்கிழமை அல்ல - தேர்தல் கள வேட்பாளரைத் தீர்மானிக்கப் போகும் ‘பெரிய செவ்வாய்க்கிழமை’ அன்று என்ன நடக்கும்? அன்று தான் 22 மாநிலங்கள், யாருக்கு ஆதரவு? யார் எங்கள் வேட்பாளர்? என்று வாக்கு அளிக்கிற தேர்தல். இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளும், ஊடகங்களில் முதன்மையான இடம் பெற்றன.

இதில், ஹில்லாரி கிளிண்டன், செனட்டராக உள்ள மாநிலம் நியூ யார்க். அதிக வாக்காளர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட மாநிலம். இங்கே அவருக்கு 57 விழுக்காடு ஆதரவும், 137 பிரதிநிதிகளின் வாக்குகளும் கிடைத்தன. ஒபாமாவுக்கு, 93 வாக்குகளும், 40 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பெரிய மாநிலங்களுள் ஒன்றான கலிபோர்னியாவில், ஹில்லாரிக்கு 50 விழுக்காடு வாக்குகளும், 203 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்கு 43 விழுக்காடு வாக்குகளும், 165 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இதைவிடப் பெருமளவில் ஹில்லாரிக்கு இங்கு வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. 92, 96 ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இங்கு வசிக்கும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ வம்சத்தினர் முழுக்கவும் பில் கிளிண்டனின் ஆதரவாளர்கள்.

பாரக் ஒபாமாவுக்கு எட்வர்டு கென்னடி ஆதரவு தந்த நிலையிலும்கூட, அவரது மாநிலமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில், ஹில்லாரி கிளிண்டனுக்கே 56 விழுக்காடு வாக்குகளும், 55 பிரதிநிதிகள் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்குக் கிடைத்தது. 41 விழுக்காடு வாக்குகளும், 38 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தன. நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, அர்கன்சாஸ், அரிசோனா, ஒக்லகாமா, டென்னஸ்ஸி ஆகிய மாநிலங்களில், ஹில்லாரி கிளிண்டனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.

பிரதிநிதிகள் ஆதரவில் ஹில்லாரி கிளிண்டன் முந்தினாலும்கூட, அலபாமா, அலாஸ்கா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஜார்ஜியா, இடாகோ, இல்லினாய், கான்சாஸ், மின்னசோட்டா, மிசௌரி, வடக்கு டகோடா, உடா ஆகிய 13 மாநிலங்களில் பாரக் ஒபாமா அதிக வாக்குகளைப் பெற்றது, பந்தயத்தில் பாரக் ஒபாமா இறுதியில் வெல்வார் என்ற எண்ணத்தையே வெகுவாக உருவாக்கிற்று.

இதன் பின்னர், பிப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில், லூஸியானா, வாசிங்டன், விர்ஜின் தீவுகள், நெப்ராஸ்கா ஆகிய நான்கு மாநிலங்களிலும், 10 ஆம் தேதி தேர்தலில் மெயின் மாநிலத்திலும், பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலில் கொலம்பியா மாவட்டத்திலும், மேரிலாண்ட், விர்ஜீனியா மாநிலங்களிலும் ஒபாமாவே வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு அடிமேல் அடியாக, பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலில், அவாய் தீவு மாநிலத்திலும், விஸ்கான்சின் மாநிலத்திலும் ஒபாமாவே வெற்றி பெற்றார்.

இந்தத் தொடர் வெற்றிகள், ஹில்லாரி முகாமை நிலைகுலையச் செய்தன. இனி அடுத்து, மார்ச் 4 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று, டெக்சாஸ், ஒஹையோ மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்தான் மிக முக்கியமானதாகும். ஒபாமாவா? அல்லது ஹில்லாரியா? என்பதைத் தீர்மானிக்க வழிவகுக்கும். இரண்டும் பெரிய மாநிலங்கள். இவ்விரு மாநிலங்களிலும், பிப்ரவரி முதல் வாரம் வரையிலும் அமோகமான ஆதரவு ஹில்லாரி கிளிண்டனுக்கே இருந்தது. ஆனால், பல மாநிலங்களில், பெருமளவில் முதலில் ஹில்லாரிக்கு இருந்த ஆதரவு, ஓரிரு வாரங்களில் சடசடவெனச் சரிந்து, ஒபாமா முந்தியது மலைக்க வைக்கிறது, திகைக்கச் செய்கிறது, பிரமிப்பு ஊட்டுகிறது. அதுபோன்ற நிலைமை டெக்சாசிலும், ஒஹையோவிலும் ஏற்படுமா? அல்லது ஹில்லாரியே பெரும் ஆதரவைப் பெறுவாரா? என்ற சர்ச்சை நடந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து, பில்கிளிண்டன் சொல்லுகையில், “இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால்தான், இந்தப் போட்டியில் ஹில்லாரி நீடிக்க முடியும். இல்லையேல், மூட்டை கட்ட வேண்டியதுதான்" என்றார்.

இவ்விரு மாநிலங்களிலும் ஹில்லாரி சற்று முந்தினாலும்கூட, இறுதியில் பாரக் ஒபாமா வெல்வார் என்றும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவார் என்றும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முன்பு எதிர்பார்த்த வெற்றி ஒருவேளை கிடைக்காமல் போகும் என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதால்தான், ஹில்லாரி கிளிண்டன் கடைசியாகக் கூறுகையில், இவ்விரு மாநிலங்களிலும் எனக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஓட்டுக் குறைந்தாலும், எப்படியும் இன்னும் ஓட்டுப் போட வேண்டியவர்களின் ஆதரவை நான் பெற முடியும்’ என்றார்.

ஒபாமாவுக்குக் கிடைத்து வரும் ஆதரவும் செல்வாக்கும் கண்டு பொறுக்காமல், ஹில்லாரி கிளிண்டன் பொருமுகிறார், நிந்திக்கிறார், பழிக்கிறார். அதுவும் அவருக்குப் பாதகம் ஆகிறது. மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்புவரை, இருவருக்கும் கிடைத்த ஓட்டு நிலவரம்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலைத் தீர்மானிக்கும் மொத்த வாக்குகள் 4049 ஆகும். இதில், சிறப்புப் பிரதிநிதிகளின் 796 வாக்குகளும் அடங்கும். 2025 வாக்குகள் பெறுகிறவரே அதிபர் வேட்பாளர் ஆவார். சிறப்புப் பிரதிநிதிகளுள் சிலர், தங்கள் வாக்கு யாருக்கு என்பதை இப்போதே அறிவித்து விட்டனர். அந்த வாக்குகளையும் சேர்த்து, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், காகஸ் வாக்காளர்களும், பிரைமரி வாக்காளர்களும், சில சிறப்புப் பிரதிநிதிகள் தந்த வாக்குகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், பாரக் ஒபாமாவுக்கு இதுவரை கிடைத்து உள்ள வாக்குள் 1375. ஹில்லாரி கிளிண்டனுக்கு 1277. பாரக் ஒபாமா 95 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.

மார்ச் 4 ஆம் நாள் டெக்சாஸ்ச், ஒஹையோ ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும், ரோட்ஸ் தீவுகள், வெர்மாண்ட் ஆகிய இரண்டு சிறிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டெக்சாஸ், ஒஹையோ, ரோட்ஸ் தீவுகளில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்று இருக்கிறார். வெர்மாண்ட் மாநிலத்தில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார்.

வாக்கு விவரம்:
டெக்சாஸ்:
ஹில்லாரி 51%
ஒபாமா 47

ஒஹையோ:
ஹில்லாரி 54%
ஒபாமா 44%

ரோடஸ் தீவுகள்:
ஹில்லாரி 58%
ஒபாமா 40%

வெர்மாண்ட்:
ஒபாமா 60%
ஹில்லாரி 34%

மூன்று மாநிலங்களில் ஹில்லாரி வெற்றி பெற்றாலும் கூட, தற்போதும், ஒபாமாதான் ஒட்டு மொத்தத்தில் கூடுதலாக 86 பிரதிநிதிகள் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார். தற்போதைய நிலவரம் இதுதான்:

பாரக் ஒபாமா 1477
ஹில்லாரி 1391

‘ஒஹையோவின் தீர்ப்புதான் அமெரிக்காவின் தீர்ப்பு’ என்றும், ஒஹையோவில் வெற்றி பெற்றவர்தான் கட்சியின் வேட்பாளராக கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும், அதனால் அதிபர் தேர்தலில் தானே கட்சி வேட்பாளர் ஆவேன் என்றும் ஹில்லாரி கிளிண்டன் எக்காளமிட்டுச் சொல்கிறார். ஆனால், இன்னமும் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் நிற்கும் பாரக் ஒபாமா, நிச்சயமாக வெல்வேன் - ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவேன் என்று அழுத்தமான நம்பிக்கையுடன் கூறுகிறார். போட்டி பலமாகி விட்டது, பரபரப்பு மிகுந்து விட்டது, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில். இதுவரை எக்காலமும் ஏற்பட்டு இராத, போட்டியும், உலகளாவிய முக்கியத்துவமும் ஏற்பட்டு விட்டது. இதேவேளையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெடீநுன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டார்.

புவியெங்கும் உள்ள கோடானுகோடிப் பேர் இதயங்களில் அதிர்வு அலைகளை எழுப்புகிற பாரக் ஒபாமாவின் பிறப்பு, வளர்ப்புப் பின்னணியை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்....

1 comment:

தியாகராஜன் said...

வரலாற்று நாயகன் வைகோவின் தொடர் கட்டுரை கண்டு மிக மகிழ்ந்தேன். தங்கள் பதிவுகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.வணக்கம்.