Friday, June 20, 2008

மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு

சென்னையில் சூன் 18ம் தேதியன்று சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 3ம் மண்டல மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு முன்பு கோவை (16.03.2007), விழுப்புரம் (30.06.20087), ஆகிய நகரங்களில் இரண்டு மண்டல மாநாடுகள் நடைபெற்றுள்ளன.


மதிமுக முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற தொண்டர்படையின் அணிவகுப்போடு மாநாடு தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை 3 மணியளவில் தொடங்கிய தொண்டகளின் அணிவகுப்பு தீவுத் திடலை அடைந்தவுடன் 4 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது.

மாநாடு குறித்து நாளிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வந்த செய்திகள்:

தினமணி செய்தி:

தி.மு.க.வைத் தோற்கடிக்க மக்கள் சக்தியைத் திரட்டுவோம்

சென்னை, ஜூன் 18 : நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க, அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று ம.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை தீவுத் திடலில் ம.தி.மு.க. சென்னை மண்டல மாநாடு புதன்கிழமை மாலை பேரணியுடன் தொடங்கியது.

பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். மாலை 4 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் தொடங்கியது. ம.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டுத் தீர்மானங்கள்: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது. முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில் பக்கத்து மாநிலங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு செய்யும் விதத்தில் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனை காவு கொடுத்து துரோகம் இழைத்து விட்டது.

கண்துடைப்பு நாடகம்: பன்னாட்டு நிறுவனங்களின் யூக பேர வணிகம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் இரண்டு சதவீதம் விற்பனை வரியை குறைத்தது கண்துடைப்பு நாடகம்.

நாடாளுமன்ற, சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்காண பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.

தமிழ் இனத்துக்கு துரோகம்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்கு கொலை செய்யும் கொடுமை ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகி காவல்துறையின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவிகள் செய்வது தமிழ் இனத்துக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேறியது.

சென்னைத் தீவுத்திடலில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டில் "நாடாளுமன்றத்தில்அண்ணா-வைகோ" நூல் வெளியீடு நடைபெற்றது.

(இடமிருந்து) முன்னாள் அமைச்சர் தம்பிதுரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைப்புலி தாணு, பொருளாளர் மு. கண்ணப்பன், செந்தில் அதிபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன், செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

தினதந்தி செய்தி:
விலைவாசி உயர்வு பிரச்சினை: கம்யூனிஸ்டு கட்சிகள் நாடகமாடுகின்றனசென்னை மாநாட்டில் வைகோ பேச்சு:

சென்னை, ஜுன்.19- விலைவாசி உயர்வு பிரச்சினையில் கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகின்றன என்று வைகோ குற்றம் சாட்டினார்.

மாநாடு: ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் மாநில துணை செயலாளர் நாசரேத் துரை தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் மு.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், தீக்குளித்த தியாகிகள் திருவுருவப்படத்தை திருவள்ளூர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் திறந்து வைத்தார். அதே போல் திராவிட இயக்க தலைவர்கள் படத்தை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு திறந்தார்.

நிகழ்ச்சியின் போது, தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் 141 பவுன் தங்க வாள் கட்சியின் பொதுசெயலாளர் வைகோவுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் கட்சி நிதியாக ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது.

மாநாட்டில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது:-

ஆட்சி அதிகாரம்:

இங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இருக்கிறோம். அமெரிக்காவில் நீக்ரோ இனத்தவர் வெள்ளைமாளிகையின் ஜனாதிபதியாக வருவார் என்று காஞ்சி இதழில் 11 வாரங்களாக அண்ணா எழுதினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தேர்தல் மாநாட்டுக்கு செல்ல முடியாமல் வெளியே கிடந்தார் ஒபாமா. ஆகஸ்டு 28-ந் தேதி அதிகாரப்பூர்வ வேட்பாளராக பேச இருக்கிறார். 6 வருடங்களுக்கு முன்பு அவர் கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு 4 பேர் கூட வரவில்லை. இன்று உலகம் முழுவதும் அவர் உதடு அசைவதற்காக காத்து கிடக்கிறார்கள்.

நாமும் சாதிக்க முடியும். உண்மையான திராவிட இயக்கம் என்று பதிவு செய்ய முடியும். ஈழத்தமிழர்களை விடுதலை அடைய செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூட்டை தடுக்க முடியும். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நதிகளை இணைக்க முடியும். உழவர்கள் கண்ணீர் சிந்தாமல் தடுக்க முடியும்.

கம்ïனிஸ்டு கட்சிகள் நாடகம்: விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதில்லை. இந்த மாநாட்டின் மூலமாக விவசாயிகளுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன். என்ன விலைக்கு கேட்டாலும், உங்கள் விவசாய நிலத்தை விற்று விடாதீர்கள். 5 லட்ச ரூபாய்க்கு கேட்டால் கூட கொடுக்காதீர்கள்.

விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. விலைவாசியை உயர்த்தினால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கம்ïனிஸ்டு கட்சிகள் ஏன் சொல்லவில்லை. ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருந்தால் விலைவாசி உயர்ந்திருக்காது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருக்க மாட்டார்கள். கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும். திருச்சியில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.

விழாவில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரையும் பேசினார்.

தீர்மானங்கள்: மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் 2 விழுக்காடு விற்பனை வரியை குறைத்தது வெறும் கண்துடைப்பு ஆகும்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.

இலங்கை பிரச்சினை: சிங்கள அரசு நடத்தும் இனப்படுகொலைக்கு உடந்தையாக விமான படைக்கு ரேடார்களையும் கொடுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி வருவதோடு, பிற நாடுகளிலிருந்து இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவும் நோக்கத்தில் 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலர் இந்திய அரசு, இலங்கை ராணுவத்துக்கு வழங்கியிருப்பது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோழமையும், நல்லுறவும் கொண்டுள்ள அ.தி.மு.க.வுடன் தோள் சேர்ந்து மக்கள் சக்தியை திரட்டுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ம.தி.மு.க. பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் எம்.பி. இரா.செழியன், துணைபொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில்சமëபத், தலைமைக்கழக செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைப்புலி தாணு, இயக்குனர் சுந்தரராஜன், வெளியீட்டுக்கழக செயலாளர் கவிஞர் தமிழ்மாறன், மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், மனோகரன், ஜீவன், பாலவாக்கம் சோமு, மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார், செய்தி தொடர்பாளர் நன்மாறன், சீமாபஷீர், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி: முன்னதாக நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து சீருடை அணிந்த ம.தி.மு.க. தொண்டர் படையினரின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த அணிவகுப்பு அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக மாநாடு நடைபெறும் தீவுத்திடலுக்கு சென்றது. இந்த பேரணியை தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்ட தனி மேடையில் இருந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

தினமலர் செய்தி:
சென்னை: "தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது,என்று வைகோ ஆரூடம் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க. மண்டல மாநாட்டில் வைகோ பேசியதாவது:

ம.தி.மு.க.,வை அழிக்க முதல்வர் கருணாநிதி போட்ட திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விட்டது. பலம் பொருந்திய உங்களுடன் மோதி வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அண்ணாதுரை உருவாக்கிய பாசத்துடிப்பு, தி.மு.க.,வில் அடங்கிப் போயுள்ளது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய பரிமாணமாக ம.தி.மு.க., உள்ளது. கோட்டையில், குடும்பத்தில், கூட்டணியில் குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், முதல்வர் கருணாநிதி இப்போது பலவீனமாக உள்ளார். அவர் பலவீனமாக இருக்கும் போது அவர் மீது கடுமை யான கணைகளை தொடுக்க விரும்பவில்லை. குடும்பத்தினருக்காக திராவிட இயக்கத் தலைவர்களை கருணாநிதி மறந்து வருகிறார்.

நிர்வாக சீர்கேடு காரணமாக ஏற்கனவே மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலை யில், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் விதத்தில் திருட்டு மின்சாரம் மூலம் கடலூரில் தி.மு.க., மாநாடு நடந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியை மக்கள் தூக்கி எறிவர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.
நான்கு ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள் இப்போது தவறான பொருளா தாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் திட்டமிட்ட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழக்கப் போகின்றனர். குத்துச் சண்டையில் மொத்தம் 16 ரவுண்டுகள் உள்ளன. அதுபோல், நாங்கள் இப்போது 15வது ரவுண்டில் உள்ளோம். சினிமாவில் ஹீரோ கடைசியில் ஜெயிப்பது போல் ம.தி.மு.க., ஜெயிக்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.

தி ஹிந்து செய்தி:

UPA, DMK regimes have failed on all fronts, says MDMK

CHENNAI: Accusing the Congress-led UPA at the Centre and the DMK government in Tamil Nadu of failing on all fronts, the Marumalarchi Dravida Munnetra Kazhagam on Wednesday vowed to mobilise people, along with the AIADMK, against both the governments in the coming Lok Sabha elections.

A resolution adopted at the MDMK’s Chennai zonal conference stated that the UPA government could not even fulfil the promises made in the Common Minimum Programme. “It has also failed to prevent the neighbouring States from acting against the integrity of the nation through their refusal to acknowledge the rights of Tamil Nadu in the Cauvery water dispute, the Mullaperiyar dam issue, the Hogenakkal drinking water project and other issues. The DMK government has betrayed the interests of Tamil Nadu,” it said.

Addressing the conference, party general secretary Vaiko alleged that Chief Minster M. Karunanidhi had converted the DMK into a family property.

“The MDMK will capture political power in the State. We will put an end to the sufferings of the Eelam Tamils. We can stop the killing of Tamil fishermen by the Sri Lankan Navy,” he said.

AIADMK general secretary Jayalalithaa sent greetings for the conference. It was read out by MDMK propaganda secretary M. Thambidurai.

MDMK legislature party leader M. Kannappan demanded that the ban on the Liberation Tigers of Tamil Eelam be lifted.

சிஃபி செய்தி:

மதிமுக மாநாட்டுத் தீர்மானம்

சென்னை: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் மதிமுக சென்னை மண்டல மாநாடு, ஜூன் 18 அன்று பேரணியுடன் தொடங்கியது. பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். பொதுக்கூட்டம் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கியது. மதிமுகவின் முன்னணித் தலைவர்களும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்து துரோகம் இழைத்துவிட்டது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்கான பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்குக் கொலை செய்யும் அநிறைவேற்றப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தட்ஸ்தமிழ் செய்தி:

காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது-வைகோ

சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது என்றார் வைகோ.

மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 141 பவுன் தங்க வாள் வைகோவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

மாநாட்டில் வைகோ பேசியதாவது:

இன்றைக்கு சொல்ல முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏன் சொல்ல முடியவில்லை.

எது எதற்கோ அரசை மிரட்டிக் காரியம் சாதிக்கும் இவர்கள், அத்தியாவசியமான இந்த பிரச்சினைக்காக ஒரு முறை அரசை மிரட்டியிருக்கலாமே... அப்படிச் செய்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருக்காது. எல்லோரும் திட்டமிட்டு நாடகம் ஆடுகிறார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படப் போகிறது. அப்போதுதான் இவர்கள் தங்களின் தவறுகளைப் புரிந்து கொள்வார்கள்.

விளை நிலங்களைப் பாதுகாப்போம்:

இன்றைக்கு நம் விவசாயத்தை அச்சுறுத்தும் பிரச்சினை மழையோ, தண்ணீரோ அல்ல. உழுவதற்கு நிலங்கள் இல்லாத நிலைதான். நகரங்களை ஒட்டி இன்று கிராமங்களோ வயல் வெளிகளோ இல்லை. அப்புறம் எப்படி விவசாயம் இருக்கும்?

விவசாயிகளே... உர விலை, விதைகளின் விலைகளை அரசு உயர்த்தி, உங்களை விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப் பார்க்கிறது. அப்போதுதானே வெறுத்துப் போய் விவசாயத்துக் கைவிட்டு நிலத்தை விற்பீர்கள்... அப்போதுதானே இங்கு தொழிற்சாலை கட்டிவிட்டு, வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்ய முடியும்...! இது எத்தனை பெரிய சதி தெரியுமா?

நண்பர்களே... எவ்வளவு விலை கொடுத்தாலும் உங்களை நிலங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்றார் வைகோ.

அதிமுக சார்பில் அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். முன்னாள் எம்.பி. இரா. செழியன், மதிமுக துணைப் பொதுச் செயளர் மல்லை சத்யா, கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.

ஏனைய செய்திகள்:

Tuesday, June 10, 2008

Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-2

அன்று ஆபிரகாம் லிங்கன்! இன்று பாரக் ஒபாமா!

மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வ காட்சிகள் அமெரிக்க அரசியல் அரங்கில் நடப்பதையும், 1966 ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் மனதிšல் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்த "மனிதன்" எனும் புதினமும், அதனால் அவர் தம்பிக்குத் தீட்டிய மடல்களையும் பற்றிக் கடந்த வாரம் கூறினேன். பத்து மாதங்களுக்கு மு‹ன்னர், இவரா? இந்தக் கருப்பரா? அதிலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முயல்வதா?

கேள்விக்குறியாக இருந்த பாரக் ஒபாமா, இன்று ஆச்சரியக்குறி ஆகிவிட்டார். இப்படியும் நடக்குமா? நம்ப முடியவிšலையே! ஏதோ போட்டிக்கு முயற்சிக்கிறார் ஜனநாயகக் கட்சியிšன் எட்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகையிலே அதிபராக இருந்த விவிலியம் ஜெபர்சன் கிளிண்டனின் துணைவியார், நியூயார்க் நகரில் புகழ்மிக்க செனட்டர் ஹிலாரி ரோதம் கிளிண்டன்தான், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது முடிந்துபோன முடிவு ஆயிற்றே! அமெரிக்க நாட்டி‹ல் குடியரசுத் தலைவராகப்போகும் முதல் பெண்மணி - அதுவும் ஒரு புதிய திருப்பம் - ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இருந்தாலும், இந்தக் கருப்பு இளைஞர், போட்டிப் பந்தயத்தில் நுழைவதே பெரிது அ‹ன்றோ! பரவாயிšலை. ஓரளவு ஓட்டுக்களும் கிடைக்கும் என்ற ஆருடங்கள் எல்லாம், பொடிப்பொடியாகிறன.

இதோ நெருங்கி வந்துவிட்டார்; இடைவெளி குறைகிறது; அடடா, முந்துகிறாரே; கருப்பர்கள் அதிகம் உள்ள மாநிலம் அல்லவா -அதுதான்போலும்; இல்லையில்லை, வெள்ளையர்கள் பெரும்பாலான மாநிலத்திலும் சமபலம். அடடா, என்ன ஆச்சரியம்! அங்கும் அலவா முந்துகிறார்!

பேச்சு ஆற்றலால், வரலாற்றின் போக்கை மாற்றியவர்கள் பலர் உண்டு, பல்வேறு நாடுகளில்! 1917. போஸ்விக்குகள், ரஷ்யாவில் வெறிகண்ட புரட்சியில் பெரும்பங்கு வகித்தது, லியான் ட்ராட்ஸ்கியின் பேச்சு ஆற்றல்தான். அதைப் பாராட்டிப் பரவசம் உற்றவர் மாமேதை லெனின். இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியக் குண்டுவீச்சால் இடிபாடான லண்டனில், அச்சம் இன்றி ஆபத்தை எதிர்கொளும் துணிச்சலைத் தன்னாட்டு மக்களுக்குத் தந்தது சர்ச்சிலின் பேச்சு ஆற்றல்.

சைமன் பொலிவரின் பேச்சுகள், பொலிவியாவின் சரித்திரத்தை மாற்றியது. ஏன், அமெரிக்க நாட்டில், பகுத்தறிவுச் சுடராய் எழுந்த ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் பேச்சுகள், பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது உண்டு. கருப்பர்களின் விடிவெளியாக முளைத்த மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை, தாமஸ் ஜெபர்சனின் எண்ணங்களை, வசீகரிக்கும் கென்னடியின் வாதத் திறமையை, தன் உரைகளில் மிளிரவைக்கும் வித்தகராக அன்றோ இந்தக் கருப்பு இளைஞன் மேடையில் நிற்கிறான்.

அதிகமாக அறிமுகம் இல்லாத, இலினாய்ஸ் மாநிலத்துக்கு உட்பட்ட ஒரேயொரு கருப்பு இன செனட் உறுப்பினராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய ஒரேயொரு உரையின் மூலம், அனைவர் உள்ளங்களையும் வென்றார். என்ன அருமையாகப் பேசுகிறார்! பேச்சைக் கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன - மறக்க முடியவில்லை. இன்னும் அந்த மயக்கத்தில் இருக்கிறேன் என்று பேசத் தொடங்கினார்கள். ஊரெங்கும், நாடெங்கும் இதே பேச்சு. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதத் தொடங்கின. தொலைக்காட்சி நிறுவனங்கள் தேடிவந்து பேட்டி கண்டன.

இதே இலினாய்ஸ் மாநிலத்தில் இருந்துதான், ஆபிரகாம் லிங்கன் செனட்டராக இருந்தார். தனது அற்புதமான பேச்சு ஆற்றலால், எதிரிகளை வென்றார்; வேட்பாளர் ஆகவும் களத்தில் நின்றார்; குடியரசுத் தலைவரும் ஆனார். கருப்பர்களின் அடிமை விலங்கை உடைக்கப் பட்டயம் தீட்டியதால் ஆவியும் தந்தார்.

பாரக் ஒபாமாவா? அவருக்கு அனுபவம் கிடையாதே? அவர் எப்படி அதிபர் ஆக முடியும்? எப்படி இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்? என்று, கிளிண்டனின் வட்டாரம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தது. சிகாகோவி‹ பிரபலமான ஏடு ஒன்று, அதுபற்றி வெளியிட்ட கருத்துப் படம், அமெரிக்கா முழுமையும் பேசப்பட்டது. இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகளான சிறுமிகள், ஆபிரகாம் லிங்கனின் படத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைப் போல அக்கருத்துப்படம். "அனுபவம் இல்லாத ஒரு வழக்கறிஞரை இங்கிருந்துதான் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினோம்; நாட்டுக்கு நன்மையாக முடிந்தது. இப்பொழுதும் அதுபோல் ஏன் நடக்கக்கூடாது?" என்பது அதன் பொருள். வாயடைத்துப் போயிற்று கிளிண்டனின் வட்டாரம்!

சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க ஊடகங்களில், ஏடுகளில், பரபரப்பாக இடம்பெற்ற பாரக் ஒபாமா பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. உலகின் எந்த மூலையிலே பிறந்தாலும், ஒருசிலர் கண்டங்களைக் கடந்து மக்களை ஈர்க்கிறார்கள். அறிவால், ஆற்றலால், காந்தமென வசீகரிக்கும் பேச்சால் கவருகிறார்கள்.

சி.என்.என் தொலைக்காட்சியில் ஒபாமாவின் பேச்சைக் கேட்ட நான், தானாகவே அவரது பற்றாளன் ஆகிவிட்டேன். ஐம்பதுகளில், அறுபதுகளில், அறிஞர் அண்ணா தன் பேச்சால், செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், இதயங்களை வென்றதுபோல், இந்த நீக்ரோ இளைஞரும், ம்னித மனங்களைத் தன் பக்கம் அள்ளுகிறார். கருப்பர்கள் மட்டும் அன்றி வெள்ளையர்களும், அதிலும் குறிப்பாக வாலிப வயதினர் அவர் பேச்சில் சொக்கிப் போகிறார்கள்.

"நான் ஒபாமாவின் பேச்சைக் கேட்டேன். அன்று முதல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என் நெஞ்சிலும், செவியிலும் அந்தக் குரலே ரீங்காரமிடுகிறது" என்ற பேச்சு எங்கும் எழுந்தவண்ணம் உள்ளது. பாரக் ஒபாமாவின் சிந்தனை, எல்லை கடந்தது, ஆகாயம் நிகர்த்தது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் என்னை ஊக்குவிக்கும் மாமனிதர் என்கிறார் ஒபாமா.

உலகில் சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பதைக் காந்தியாரது வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. அதனால்தான், மகாத்மா காந்தியின் படத்தைத் தனது செனட்டர் அலுவலகத்தில் தொங்கவிட்டு இருப்பதாக ஒபாமா கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி. 5000 கோடி ருபாய் மதிப்புள்ள அமெரிக்கப் போர் விமானம், 6000 கடல்மைல்கள் இடைவிடாது பறந்து தாக்கும் சக்திவாŒய்ந்த விமானம், நடுவானிšல் வெடித்துச் சிதறியது. ஆனால், அதில் இருந்த இரண்டு விமானிகளும், பாரசூட் மூலம் குதித்துத் தப்பினார்கள். திகைப்பூட்டும் ஆச்சரியம்! ஆனால், அதையும்விட, அதிசயமான ஆச்சரியம்தான் பாரக் ஒபாமாவின் பிரவேசம். வெள்ளையர் உள்ளம் கவர் கள்வனாக, நாடு நகரமெங்கும் அவர் உலா வரும் காட்சிகள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போது ஆண்டு கொண்டு இருக்கிற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார்? ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கு, அந்தக் கட்சிகளுக்கு உள்ளேயே நடக்கும் வேட்பாளர் தேர்ததான், இதற்கு முன் எந்தக் காலத்திலும் ஏற்பட்டு இராத பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அங்கு மட்டும் அன்றி, அகிலம் முழுமையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிலும், குறிப்பாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுதான், இன்று உலகெங்கும் விவாதிக்கப்படும் பொருள் ஆகிவிட்டது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போது செனட்டராக உள்ள ஜான் மெக்கெய்ன்தான் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ முடிவு ஆகிவிட்டது. இவர் வியட்நாம் போரில், சாகசம் புரிந்தவராக, ஆறு ஆண்டுகள் அங்கு சிறையில் சித்திரவதைக்கு உள்ளானபோதும், பிற கைதிகளுக்கு முன்னதாக விடுதலைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் நிராகரித்த துணிச்சல்காரராகவும், புகழ் பெற்றவர். இவரை எதிர்த்து வெல்வதற்கு, தகுதியானவர் ஹிலாரி கிளிண்டன்தான் என்று, கடந்த ஆண்டு நவம்பர் வரையிலும் கருதப்பட்டார். ஆனால், களத்தில் பெரும் புயலாகப் பிரவேசித்த பாரக் ஒபாமா, எவரும் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

நேற்று வரை ஹிலாரியை ஆதரித்தவர்கள், இன்று திடீரென்று, பாரக் ஒபாமா பக்கம் சாய்கிறார்கள். இந்த விந்தைமிக்க மாற்றம், அனைத்துத் தரப்பினரிடமும் பரவுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை, ஹிலாரியை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், 'அனைவருக்கும் சம உரிமைகள்' போராட்ட நாயகனுமான ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜான் லீவிஸ், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல; வேட்பாளரைத் தேர்ந்து எடுக்கும் கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகளுள் (Super Delegate) ஒருவரும் ஆவார். அவர் பிப்ரவரி 28 ஆம் நாள், வாசிங்டனில் செய்த அறிவிப்பு, ஹிலாரி வட்டாரத்தை அதிர்ச்சிக்கும், ஒபாமா வட்டாரத்தை ஆச்சரியத்துக்கும் ஆளாக்கியது.

அவர் சொன்னார்: "அமெரிக்காவில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 1968 இல், தேர்தல் களத்தில், ராபர்ட் கென்னடி போட்டியிடத் தயாரான காலத்துக்குப் பின்னர், இத்தனை ஆண்டுக்காலமும் நான் பார்த்திராத, ஒருவிதமான பேரார்வம், ஒருவிதமான இயக்கம், ஒருவிதமான உள்ளுணர்ச்சி, அமெரிக்க மக்களின் எண்ணங்களில், இதயங்களில், ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியலில், ஒரு புதிய விடியலை மக்கள் தேடுகிறார்கள். அந்த மாற்றத்தின் அடையாளமாகவே, செனட்டர் பாரக் ஒபாமாவை அவர்கள் காண்பதாக நான் கருதுகிறேன். அதனால், நானும் பாரக் ஒபாமாவையே ஆதரிக்கிறேன்".

ஹிலாரியின் கூடாரத்தில் இருந்தே இப்படி ஒரு அறிவிப்பு வந்ததைக் கண்டு, பாரக் ஒபாமா கூறும்போது, " மனித உரிமை இயக்கத்தில் மாபெரும் தலைவரான ஜான் லீவிஸ், அமெரிக்க மக்களால் போற்றப்படுபவர். அவரது ஆதரவு மூலம் எனக்கு மிகப்பெரும் கௌரவத்தைத் தந்து உள்ளார்" என்று குறிப்பிட்டார்.

சூடும் சுவையும் நிறைந்த விவாதப் போட்டி, ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் இடையில், மிக விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆனால், பிப்ரவரி தொடங்கியதற்குப்பின், களத்தில் தான் மோதப் போவது, பாரக் ஒபாமாவுடன்தான் என்று, ஜான் மெக்கெய்ன் முடிவு செய்துவிட்டார் போலும். அதனால், பாரக் ஒபாமா மீதே கணைகளைத் தொடுக்கிறார். விமர்சனங்களை வீசுகிறார். ஹிலாரி கிளிண்டனைப் பற்றிப் பேச்சே இல்லை.

ஈராக் பிரச்சினை குறித்து, ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை, அங்கே அமெரிக்க வீரர்கள் உயிர்ப்பலி ஆவதை, உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து சூழ்வதைக் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கும் பாரக் ஒபாமா, தான் அதிபர் ஆனால், அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து, முதல் வேலையாகத் திரும்பப் பெறுவேன் எனக் கூறி வருகிறார்.

அண்மையில், ஒரு விவாத மேடையில், "ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள், செயல்பட்டால், என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஈராக்கில் அல் கொய்தா தளம் அமைந்தால், அதை நசுக்க அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவேன் என்றார்.

இந்த பதிலுக்கு, விமர்சனமாக ஜான் மெக்கெய்ன், "ஒபாமாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். ஈராக்கில் அல் கொய்தா இருக்கிறது. நாம் வெளியேறினால், அவர்கள் தளம் மட்டும் அமைக்க மாட்டார்கள். அவர்கள் அந்த நாட்டையே கைப்பற்றிக் கொள்வார்கள். அல் கொய்தாவிடம், ஈராக்கை ஒப்படைக்க விரும்புகிறார் ஒபாமா" என்றார்.

மெக்கெய்ன் சொன்ன சில மணி நேரத்துக்கு உள்ளாக, பதிலடியாக, பாரக் ஒபாமா கூறுகையில், "ஜான் மெக்கெய்னுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். ஜார்ஜ் புசும், ஜான் மெக்கெய்னும் ஈராக்கில் படையெடுப்பதற்கு முன்பு அங்கு அல் கொய்தா கிடையாது. ஆபத்தை விதைத்ததே இவர்கள்தாம்" என்றார்.

அமெரிக்க இதயங்களையும், ஊடகங்களையும், வேகமாகப் பற்றிப் படர்ந்துவரும் பாரக் ஒபாமாவுக்குத் திரண்டு வரும் ஆதரவு, மந்திரமா? மாயாஜாலமா? காரணம் தேட முடியாத அற்புதமா? பெரும் புதிராக இருக்கிறார். எப்படிப் பெருகியது இந்த ஆதரவு? எவ்விதம் நாலுகால் பாய்ச்சலில் தாவி வளருகிறது? என்பதைக் கணக்கில் எடுப்போம்.

இந்த ஆண்டு, ஜனவரி மூன்றாம் நாள்தான் முதன்முதலாக அயோவா மாநிலத்தில், வேட்பாளருக்கான தேர்தல் நடந்தது. கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் அன்றி, மற்றவர்களும் வாக்கு அளிக்கின்ற காகஸ் (Caucus) தேர்தலில், பாரக் ஒபாமாவுக்கு 38 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஹிலாரி கிளிண்டனுக்கு 29 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. இதனைப் பெரிதாகக் கணக்கில் கொள்ளாத ஹிலாரி முகாம், அலட்சியம் செய்தது. ஐந்து நாட்கள் கழித்து, நியூ ஹேம்ப்சயர் மாநிலத்தில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் பிரைமரி தேர்தலில் , ஒபாமாவுக்கு 37, ஹிலாரிக்கு 39 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

ஜனவரி 19 ஆம் நாள் நெவேடா மாநில காகஸ் வாக்குப்பதிவில், ஒபாமாவுக்கு 45, ஹிலாரிக்கு 51 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. ஆனால், ஜனவரி 26 ஆம் நாள், தெற்கு கரோலினா மாநில பிரைமரி தேர்தல், ஹிலாரிக்குப் பலத்த அதிர்ச்சியைத் தந்தது. இங்கு பாரக் ஒபாமா பிரைமரி தேர்தலில் 2,95,091 வாக்குகளும், 55 விழுக்காடு ஆதரவும் பெற்றார். ஹிலாரிக்கு 1,41,128 வாக்குகளும், 27 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பிரதிநிதிகள் கணக்கில், ஒபாமாவுக்கு 25 பிரதிநிதிகளும், ஹிலாரிக்கு 12 பிரதிநிதிகளும் ஆதரவு அளித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவுதான்ன், அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பாரக் ஒபாமாவுக்கு, தெற்கு கரோலினா மாநிலத்தில், அமோகமான ஆதரவு கிடைத்ததை ஏளனம் செய்தும், கிண்டலாகவும், எகத்தாளமாக பில் கிளிண்டன், "இப்படித்தான் இங்கே ஒரு கருப்பு இளைஞன் ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஒருமுறை பிரைமரி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றார். கடைசியில் என்ன ஆனார்? அதுபோலத்தான் இப்போதும் என்று, கருப்பர்கள் அதிகம் வாக்கு அளித்து விட்டார்கள் என்ற பரிகாசத்தின் தொனிதான், மொத்தத்தில் இத்தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

'கருப்பர் இனத்தைப் பாகுபடுத்தி, கொச்சை மொழியில், பில் கிளிண்டன் புண்படுத்திவிட்டார்', என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் கருப்பர்கள் அல்ல; ஜனநாயகக் கட்சியில் உள்ள வெள்ளை இனத்தவர். அதிலும், கட்சியின் முன்னணித் தலைவர்கள் வெகுண்டனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் பலமான தூணான எட்வர்டு கென்னடி, இதன் காரணமாகவே பகிரங்கமாக, தான் பாரக் ஒபாமாவை ஆதரிப்பதாக அறிவித்தார். சொற்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.

அதனாšதான், "வார்த்தைகளை அளந்து பேசு; சொற்களைச் சிதறி விடாதே, பிறகு அள்ள முடியாது; வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் என்ன?" என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.

ஒருகாலத்தில், நாய்களை விட, பன்றிகளை விட கருப்பர்கள் இழிவாக நடத்தப்பட்ட அமெரிக்காவில், இன்று எத்தகைய தலைகீழ் மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை, கடந்த 150 ஆண்டுகளில், மனங்களை உலுக்கிய இரண்டு நூல்களைப் பற்றியும், உரிமைக்குப் போராடிய மாமனிதர் மார்ட்டின் லுhதர் கிங் பற்றியும், கண்ணின்மணிகளே, நான் உங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற கடிதங்களில், கருத்து ஓட்டத்தின் உட்பொருளையும், இதிலிருந்தே நீங்கள் உணரலாம்.

கருப்பர் இனம் என்று வேறுபடுத்தும் விதத்தில் ஏளனமாகச் சொன்னதால், வெள்ளை இனத்துக் கட்சித் தலைவர்கள் அதனை வெறுமனே கண்டிக்காமல், ஒபாமாவுக்கு ஆதரவாகக் களத்திலேயே குதித்து விட்டார்கள். அதனால்தான், ‘நடப்பது தலைகீழ் மாற்றம்’ என்றேன்.

திடுக்கிடும் திருப்பமாக, பாரக் ஒபாமாவுக்கு ஆதரவு அலை வீச ஆரம்பித்தது. இது ‘ஒபாமா அலை’ (Obama Wave), என்பதே எங்கும் பேச்சு. ஓங்கி எழும் சாதாரண அலை வீச்சுத்தானா? அல்லது மண்டிலங்களைப் புரட்டிப்போடும் ஆழிப் பேரலையா? என்ற பேச்சும் ஆங்காங்கே ஆரம்பமாயிற்று. பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, வெறும் செவ்வாய்க்கிழமை அல்ல - தேர்தல் கள வேட்பாளரைத் தீர்மானிக்கப் போகும் ‘பெரிய செவ்வாய்க்கிழமை’ அன்று என்ன நடக்கும்? அன்று தான் 22 மாநிலங்கள், யாருக்கு ஆதரவு? யார் எங்கள் வேட்பாளர்? என்று வாக்கு அளிக்கிற தேர்தல். இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளும், ஊடகங்களில் முதன்மையான இடம் பெற்றன.

இதில், ஹில்லாரி கிளிண்டன், செனட்டராக உள்ள மாநிலம் நியூ யார்க். அதிக வாக்காளர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட மாநிலம். இங்கே அவருக்கு 57 விழுக்காடு ஆதரவும், 137 பிரதிநிதிகளின் வாக்குகளும் கிடைத்தன. ஒபாமாவுக்கு, 93 வாக்குகளும், 40 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பெரிய மாநிலங்களுள் ஒன்றான கலிபோர்னியாவில், ஹில்லாரிக்கு 50 விழுக்காடு வாக்குகளும், 203 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்கு 43 விழுக்காடு வாக்குகளும், 165 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இதைவிடப் பெருமளவில் ஹில்லாரிக்கு இங்கு வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. 92, 96 ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இங்கு வசிக்கும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ வம்சத்தினர் முழுக்கவும் பில் கிளிண்டனின் ஆதரவாளர்கள்.

பாரக் ஒபாமாவுக்கு எட்வர்டு கென்னடி ஆதரவு தந்த நிலையிலும்கூட, அவரது மாநிலமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில், ஹில்லாரி கிளிண்டனுக்கே 56 விழுக்காடு வாக்குகளும், 55 பிரதிநிதிகள் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்குக் கிடைத்தது. 41 விழுக்காடு வாக்குகளும், 38 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தன. நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, அர்கன்சாஸ், அரிசோனா, ஒக்லகாமா, டென்னஸ்ஸி ஆகிய மாநிலங்களில், ஹில்லாரி கிளிண்டனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.

பிரதிநிதிகள் ஆதரவில் ஹில்லாரி கிளிண்டன் முந்தினாலும்கூட, அலபாமா, அலாஸ்கா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஜார்ஜியா, இடாகோ, இல்லினாய், கான்சாஸ், மின்னசோட்டா, மிசௌரி, வடக்கு டகோடா, உடா ஆகிய 13 மாநிலங்களில் பாரக் ஒபாமா அதிக வாக்குகளைப் பெற்றது, பந்தயத்தில் பாரக் ஒபாமா இறுதியில் வெல்வார் என்ற எண்ணத்தையே வெகுவாக உருவாக்கிற்று.

இதன் பின்னர், பிப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில், லூஸியானா, வாசிங்டன், விர்ஜின் தீவுகள், நெப்ராஸ்கா ஆகிய நான்கு மாநிலங்களிலும், 10 ஆம் தேதி தேர்தலில் மெயின் மாநிலத்திலும், பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலில் கொலம்பியா மாவட்டத்திலும், மேரிலாண்ட், விர்ஜீனியா மாநிலங்களிலும் ஒபாமாவே வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு அடிமேல் அடியாக, பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலில், அவாய் தீவு மாநிலத்திலும், விஸ்கான்சின் மாநிலத்திலும் ஒபாமாவே வெற்றி பெற்றார்.

இந்தத் தொடர் வெற்றிகள், ஹில்லாரி முகாமை நிலைகுலையச் செய்தன. இனி அடுத்து, மார்ச் 4 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று, டெக்சாஸ், ஒஹையோ மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்தான் மிக முக்கியமானதாகும். ஒபாமாவா? அல்லது ஹில்லாரியா? என்பதைத் தீர்மானிக்க வழிவகுக்கும். இரண்டும் பெரிய மாநிலங்கள். இவ்விரு மாநிலங்களிலும், பிப்ரவரி முதல் வாரம் வரையிலும் அமோகமான ஆதரவு ஹில்லாரி கிளிண்டனுக்கே இருந்தது. ஆனால், பல மாநிலங்களில், பெருமளவில் முதலில் ஹில்லாரிக்கு இருந்த ஆதரவு, ஓரிரு வாரங்களில் சடசடவெனச் சரிந்து, ஒபாமா முந்தியது மலைக்க வைக்கிறது, திகைக்கச் செய்கிறது, பிரமிப்பு ஊட்டுகிறது. அதுபோன்ற நிலைமை டெக்சாசிலும், ஒஹையோவிலும் ஏற்படுமா? அல்லது ஹில்லாரியே பெரும் ஆதரவைப் பெறுவாரா? என்ற சர்ச்சை நடந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து, பில்கிளிண்டன் சொல்லுகையில், “இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால்தான், இந்தப் போட்டியில் ஹில்லாரி நீடிக்க முடியும். இல்லையேல், மூட்டை கட்ட வேண்டியதுதான்" என்றார்.

இவ்விரு மாநிலங்களிலும் ஹில்லாரி சற்று முந்தினாலும்கூட, இறுதியில் பாரக் ஒபாமா வெல்வார் என்றும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவார் என்றும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முன்பு எதிர்பார்த்த வெற்றி ஒருவேளை கிடைக்காமல் போகும் என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதால்தான், ஹில்லாரி கிளிண்டன் கடைசியாகக் கூறுகையில், இவ்விரு மாநிலங்களிலும் எனக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஓட்டுக் குறைந்தாலும், எப்படியும் இன்னும் ஓட்டுப் போட வேண்டியவர்களின் ஆதரவை நான் பெற முடியும்’ என்றார்.

ஒபாமாவுக்குக் கிடைத்து வரும் ஆதரவும் செல்வாக்கும் கண்டு பொறுக்காமல், ஹில்லாரி கிளிண்டன் பொருமுகிறார், நிந்திக்கிறார், பழிக்கிறார். அதுவும் அவருக்குப் பாதகம் ஆகிறது. மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்புவரை, இருவருக்கும் கிடைத்த ஓட்டு நிலவரம்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலைத் தீர்மானிக்கும் மொத்த வாக்குகள் 4049 ஆகும். இதில், சிறப்புப் பிரதிநிதிகளின் 796 வாக்குகளும் அடங்கும். 2025 வாக்குகள் பெறுகிறவரே அதிபர் வேட்பாளர் ஆவார். சிறப்புப் பிரதிநிதிகளுள் சிலர், தங்கள் வாக்கு யாருக்கு என்பதை இப்போதே அறிவித்து விட்டனர். அந்த வாக்குகளையும் சேர்த்து, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், காகஸ் வாக்காளர்களும், பிரைமரி வாக்காளர்களும், சில சிறப்புப் பிரதிநிதிகள் தந்த வாக்குகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், பாரக் ஒபாமாவுக்கு இதுவரை கிடைத்து உள்ள வாக்குள் 1375. ஹில்லாரி கிளிண்டனுக்கு 1277. பாரக் ஒபாமா 95 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.

மார்ச் 4 ஆம் நாள் டெக்சாஸ்ச், ஒஹையோ ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும், ரோட்ஸ் தீவுகள், வெர்மாண்ட் ஆகிய இரண்டு சிறிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டெக்சாஸ், ஒஹையோ, ரோட்ஸ் தீவுகளில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்று இருக்கிறார். வெர்மாண்ட் மாநிலத்தில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார்.

வாக்கு விவரம்:
டெக்சாஸ்:
ஹில்லாரி 51%
ஒபாமா 47

ஒஹையோ:
ஹில்லாரி 54%
ஒபாமா 44%

ரோடஸ் தீவுகள்:
ஹில்லாரி 58%
ஒபாமா 40%

வெர்மாண்ட்:
ஒபாமா 60%
ஹில்லாரி 34%

மூன்று மாநிலங்களில் ஹில்லாரி வெற்றி பெற்றாலும் கூட, தற்போதும், ஒபாமாதான் ஒட்டு மொத்தத்தில் கூடுதலாக 86 பிரதிநிதிகள் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார். தற்போதைய நிலவரம் இதுதான்:

பாரக் ஒபாமா 1477
ஹில்லாரி 1391

‘ஒஹையோவின் தீர்ப்புதான் அமெரிக்காவின் தீர்ப்பு’ என்றும், ஒஹையோவில் வெற்றி பெற்றவர்தான் கட்சியின் வேட்பாளராக கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும், அதனால் அதிபர் தேர்தலில் தானே கட்சி வேட்பாளர் ஆவேன் என்றும் ஹில்லாரி கிளிண்டன் எக்காளமிட்டுச் சொல்கிறார். ஆனால், இன்னமும் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் நிற்கும் பாரக் ஒபாமா, நிச்சயமாக வெல்வேன் - ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவேன் என்று அழுத்தமான நம்பிக்கையுடன் கூறுகிறார். போட்டி பலமாகி விட்டது, பரபரப்பு மிகுந்து விட்டது, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில். இதுவரை எக்காலமும் ஏற்பட்டு இராத, போட்டியும், உலகளாவிய முக்கியத்துவமும் ஏற்பட்டு விட்டது. இதேவேளையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெடீநுன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டார்.

புவியெங்கும் உள்ள கோடானுகோடிப் பேர் இதயங்களில் அதிர்வு அலைகளை எழுப்புகிற பாரக் ஒபாமாவின் பிறப்பு, வளர்ப்புப் பின்னணியை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்....

Monday, June 2, 2008

Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-1


பாரக் ஒபாமா!
வட துருவமாம் அலாஸ்காவில் தொடங்கி, மேற்கே பசிபிக் கடற்கரையில் இருந்து, கிழக்கில் அட்லாண்டிக் கடல் ஓரம் வரை - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும் சொற்கள் ‘‘ஆம்; நம்மால் முடியும் - Yes; We Can" ஒரு பிரளயத்தின் ஆவேசத்தை உள்ளடக்கிய சொற்கள் அவை! அனைத்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும் காந்தக் கல்லாகிய சொற்கள்.




‘முடியாது என்ற சொல்லுக்கு என் அகராதியில் இடம் இல்லை’ என முழங்கிய மாவீரன் நெப்போலியன்கூட, செயிண்ட் எலினாவில் முடங்கிப் போனான். கற்பனைக்கும் எட்டாத சாதனைகளைத் தங்கள் பெருமுயற்சியால் சாதித்துக் காட்டியோர் பலர் சரிதத்தில் உண்டு. ஆனால், அரசியல் அரங்கத்தில் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத அதிசயம் ஒன்று அரங்கேறிக் கொண்டு இருக்கிறது, அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில்!

நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட சிந்தனை அரண்களைத் தகர்த்து, மாற்றத்துக்கு முடிசூடுவதுதான் புரட்சி. போர்பூமிகளில் - இரத்த ஆறுகளின் கரைகளில் - அத்தகைய புரட்சிகள் - பிரெஞ்சு நாட்டில், பின்னர் சோவியத் ரஷ்யாவில், செஞ்சீனத்தில், இப்படிப் பலப்பல!
ஆனால், அமெரிக்காவில் இன்று நடப்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வக் காட்சி! ஒருக்காலும் எது நடக்காது, ஒருபோதும் எது நடவாது என உலகம் நினைத்ததோ, அது நடக்கிறது அங்கே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏன் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இப்பொழுது அமெரிக்காவில் அரங்கேறும் காட்சிகள் நடப்பதாக ஒருவன் சொன்னால், கைகொட்டி நகைத்து இருப்பர்.

சூரியன் மேற்கில் உதிக்கிறான்; வடதுருவமும், தென்துருவமும், தழுவிச் சங்கமித்தன; எருக்கஞ்செடியில் முல்லை பூக்கிறது; கடல்நீர் தித்திக்கிறது; இதைக்கூட நம்புவோம். ஆனால், வெள்ளை மாளிகையில் - அதிபர் நாற்காலியில், ஒரு கருப்பு மனிதனா? கனவிலும் நடவாது - கற்பனையிலும் கூடாது; இப்படித்தான் கூறி இருப்பர். ஆனால், கனவுக்கும், கற்பனைக்கும் எட்டாத அரசியல் அதிசயம் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது.

இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின், கென்யா நாட்டின், கருப்பு நீக்ரோவின் மகன் - அமெரிக்க மண்ணின் மைந்தனாகவே பிறக்கிறான் ஆனலூலுவில். அக்கருப்பு நித்திலம், உலகுக்குக் கிடைத்த நாள் 1961 ஆகஸ்ட் 4. மனிதகுலம் எத்தனையோ விசித்திரங்களைத் தன் பயணத்தில் சந்திக்கிறது. அப்படி ஓர் அடையாளம்தான் இந்த மனிதனும். காலத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறான். அப்படித்தான் அவன் பெயரும் அமைந்து உள்ளது. இன்றைக்கு உலகில் அதிக உதடுகள உச்சரிக்கும் பெயர் - ‘‘பாரக் ஒபாமா’’ ‘பாரக்’ என்ற சொல்லின் எபிரேய வேர்ச்சொல்லுக்கு - ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று பொருள்.

யார் இந்த பாரக் ஒபாமா?

அவர்தான் 2008 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் நடைபெற இருக்கின்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட, உட்கட்சித் தேர்தல் களத்தில் நிற்கிறார். பிரமிப்பு - பரபரப்பு - திகைப்பு - மலைப்பு - வியப்பு - எதிர்பார்ப்பு - இத்தனையும் அவர் பெயரைச் சுற்றியே சுழல்கின்றன - அமெரிக்கா முழுமையும்!

வெள்ளை மாளிகையிலா? அங்கே மகுடபதியாக ஒரு கருப்பரா? மேற்கில் தோன்றும் உதயம் அன்றோ என நான் எழுதிடக் காரணம் நிறையவே உண்டு.
ஸ்பெயின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட கொலம்பஸ், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ‘இங்கே ஓர் புதிய உலகம்’ இருக்கிறது என வட, தென் அமெரிக்கக் கண்டங்களை அடையாளம் காட்டியபின், காலனி வேட்டைக்குப் புறப்பட்ட ஐரோப்பியர்கள், அங்கே குடியேறினார்கள். பல்வேறு காரணங்களால், பல இனத்தவரும் அங்கே சென்றனர். உருளைக்கிழங்குப் பஞ்சத்தில் அடிபட்ட அயர்லாந்தவர், பிழைப்புத் தேடிச் சென்றனர். அப்படிக் குடியேறியவர்கள், ஆடு மாடுகளைக் கொண்டு போவது போல், ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பர்களை இறக்குமதி செய்தனர். பண்ட பாத்திரங்களைவிட இழிவாக இக்கருப்பர்கள் நடத்தப்பட்டதால்தான் ‘இறக்குமதி’ என்றேன். பிலடெல்பியாவில் செய்யப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில், ‘‘அனைத்து மனிதர்களும் சமம்’’ என்ற கோட்பாட்டை வெளியிட்டார்கள்.

ஆனால், மனிதர்கள் என்பதற்கான இலக்கணத்தில், கருப்பர்கள் இணைக்கப்படவே இல்லை. அக்கருப்பு இன மக்கள் பட்ட அவதி, இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரிக்க இயலாது. இலாயத்தில் பூட்டப்பட்ட குதிரைகளைவிட, தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளைவிட, பண்ணைகளில் அடைக்கப்பட்ட பன்றிகளைவிட, வீடுகளுக்கு உள்ளே உலவிய நாய்களைவிட மோசமாக வதைக்கப்பட்டனர். திராவிட பூமியில் ஊடுருவிய வருணாசிரமமும், மனுதருமமும் இழைத்த கொடுமைகளைவிடக் கொடூரமானவை அங்கு நடந்தவை.

நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது? தமிழகத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது? பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது? தூர தேசங்களில் நடப்பது என்ன? எங்கே கலகம் விளைகிறது? எங்கே புரட்சி கருக்கொள்கிறது? எங்கே மாற்றம் விளைகிறது? என்ற அனைத்து உலகச் செய்திகளை எல்லாம், தன் பேனாவைத் தகவல் களஞ்சியமாக ஆக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா.

தரணியில் நடப்பதையெல்லாம் தம்பிகளுக்குச் சொன்னார். உலகத்துச் செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ளும், கணிப்பொறி அன்று இல்லை; இணையதளம் அன்று இல்லை; ஏன், இன்றைய நுட்பமான தொலைக்காட்சியும் இல்லை. எனினும், கானா நாட்டைப் படம்பிடித்தார், என்க்ருமாவைச் சித்தரித்தார், ஜோமோ கென்யாட்டாவைச் சொல்லி மகிழ்ந்தார். இரும்புத்திரையின் சட்டாம்பிள்ளைக்கு மார்ஸல் டிட்டோ சட்டை செய்யவில்லை என்பதை, பிரெஞ்சு நாட்டின் டிகால், கனடாவின் கியூபெக்கில் முழங்கியதை, அயர்லாந்து விடுதலை நாயகன் டிவேலராவை, துருக்கியின் கமால் பாட்சாவைக் கண்முன்னால் நிறுத்தினார். மலாயாக் காடுகளில், இலங்கையின் தோட்டங்களில், பர்மா ரங்கூன் வீதிகளில் அல்லல்படும் தமிழனின் துன்பம் தீராதோ? அவலம் நீங்காதோ? எனும் உணர்ச்சியை ஊட்டினார்.

தோழர்களே!

இதோ பிப்ரவரி 20 ஆம் நாள், கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ பதவியைத் துறந்ததும், ‘இலட்சியங்களின் சிப்பாயாகத் தொடர்வேன்’ என உரைத்ததும், சிலிர்க்க வைக்கும் செய்தி! 1959 இல் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் இராணுவத்தை முறியடித்து, .....வானா வீதியில் வெற்றிக்கொடியுடன், புரட்சிப்படையுடன், பிடல் காஸ்ட்ரோ வலம் வந்த வரலாற்றுத் திருப்பத்தை, அன்று தம்பிக்கு மடலாகவரைந்ததும் அண்ணாதான்!

உலகப் பூந்தோட்டத்தில் ஒரு புதிய மலர்க்கொடி பூக்கிறது. அகிலத்தின் வரைபடத்தில் ஒரு புதிய தேசம் பிறக்கிறது. ஆம்; செர்பிய ஆதிக்கத்தில் இருந்து முழு விடுதலை பெற்று, இருபது இலட்சம் அல்பேனிய இன மக்களைக் கொண்ட ‘கொசோவா’ சுதந்திர இறையாண்மையுள்ள நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துவிட்டது. பிப்ரவரி 17 ஆம் நாள், நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் மகிழ்ந்து பூரிக்கும் நாள்! ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து விட்டது. நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரவு அளிக்கின்றன. அடிமைச்சவுக்கை வீசிய செர்பியா கொதிக்கிறது. தேசிய இனங்களைக் காலடியிலே போட்டு நசுக்க முயன்றதால், தனது வல்லரசு மண்டலம் துண்டுதுண்டான பின்பும் பாடம் கற்றுக்கொள்ளாத ரஷ்யா, கோபத்தால் மிரட்டுகிறது. கொலைவெறி ஆட்டம் போடும் சிங்கள இனவாத அரசு, ‘ஐயோ, இது அடுக்குமா?’ என ஊளையிடுகிறது.

தோள்தட்டி வரவேற்போம் - கொசோவாவின் விடுதலையை! பல்லாண்டு பாடுவோம் அச்சுதந்திரப் பிரகடனத்துக்கு! இனக்கொலை புரியும் எதேச்சதிகார அரசுகள், வரலாற்றின் புதைகுழிக்குப் போவது, தடுக்க முடியாத சம்பவத் தொகுப்பு ஆகும். சாத்தியமே இல்லை என்று சொல்லப்படுபவை நடப்பதுதான் மனிதகுல வரலாறு. அப்படி இடம் பெறுகிற ஒரு மாற்றம்தான், அமெரிக்க அரசியல் விதானத்தில்தோன்றும் காட்சி.

எங்கள் அண்ணனே! மணலுக்குள் தவம் கொள்ளும் எங்கள் தங்கமே! நீ புவியில் உதித்து நூறு ஆண்டுகள். உன் எண்ணமும், சிந்தனையும் ஆகாயம் அளாவியவை. மிசிசிப்பி நதிக்கரையில், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட கருப்பு மனிதர்களுக்காக, உனது உறங்காத உள்ளம் அன்று அழுதது. அதனால்தான், ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பில், 1966 ஆம் ஆண்டு, தம்பிக்கு மடல் தீட்டினாய். ஒன்றல்ல - இரண்டல்ல, பத்து மடல்கள். ஏறத்தாழ இரண்டரை மாதம்.

நம் தமிழகமோ அடுத்த பத்து மாதங்களில் சந்திக்கப் போகும் சரித்திர மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தது. ஆம்; அண்ணன் உருவாக்கிய கழகம். 1967 பொதுத் தேர்தலுக்குத் தன் முழு பலத்தையும் திரட்டி ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நேரம். ஆனால், அதைப்பற்றி எழுதுவார் அண்ணா என தம்பியர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நேரத்தில், அண்ணா அவர்கள், இந்த இரண்டரை மாத காலம் எதைப்பற்றி எழுதினார்?

இன்று நடப்பதைப் போல அன்று அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஒரு கருப்பர் இனத்தவன் வேட்பாளர் ஆகி விட்டானா? இல்லை. இர்விங் வாலஸ் என்ற ஒரு நாவல் ஆசிரியர் எழுதிய ‘தி மேன்’ என்ற தலைப்பிட்ட புதினத்தில் வரும் கற்பனைச் சம்பவங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

அறிஞர் அண்ணாஅவர்கள் திராவிட நாடு ஏட்டிலும், காஞ்சி ஏட்டிலும், தம்பிக்கு எழுதிய கடிதங்கள், அழியாத இலக்கியம் - சரித்திரப் பெட்டகம். பண்டித நேருவின் உலக சரித்திரக் கடிதங்களை நிகர்த்தவை. வியப்பு ஊட்டும் செய்தி யாதெனில், ஒரே பொருளைப் பற்றி அவர் அதிகக் கடிதங்கள் தம்பிக்கு எழுதியது, 'கைதி எண் 6342' எனும் தலைப்பில். அதற்கு அடுத்து, அவர் அதிக அளவில் பத்து வாரங்கள் ஒரே பொருளைப் பற்றி தம்பிக்கு எழுதிய கடிதங்கள்தாம் ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பிலான மடல்கள் ஆகும். அவரது உள்ளம் என்பது அடக்குமுறையை எதிர்ககும் எரிமலை அன்றோ! அதன் விளைவுதானே, அவர் தீட்டிய ‘ஆரிய மாயை’.
சனாதனத்தின் கொடுமை, அவர் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்ததால்தானே, அவர் கருஞ்சட்டைப் படையில் உலவியதும், தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டதும், ராபின்சன் பூங்காவில் தனது இயக்கத்தைத் தொடங்கியதும், அனைத்துக்கும் அதுதானே அடிப்படைக் காரணம். மனிதனை மனிதன், பிறப்பின் பெயரால் பேதப்படுத்தி வதைப்பதும், சுரண்டுவதும், அழிக்கப்பட வேண்டிய அநீதி என்பதால்தானே, வாலிப மனங்களில் கருத்துப் புரட்சியை விதைத்தார். அவரது சிந்தையும், செயலும் ஒன்றாக இருந்ததால்தான், இர்விங் வாலஸின் புதினம், அவர் மனதில் எழுப்பிய கனவு மாளிகையைத் தம்பியின் மடலில், ஓர் இலக்கியச் சித்திரம் ஆக்கினார்.

இதோ, அண்ணனின் சொற்களையே தருகிறேன்: காஞ்சி கடிதம் - வெள்ளை மாளிகையில் - 1

“தம்பி, வெள்ளை மாளிகை சென்றிடலாம், வருகிறாயா?

அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு ‘‘வெள்ளை மாளிகை’’ என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன?

மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை, அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.

வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; ‘மனிதன்’ என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்றே தலைப்பிட்டுள்ளார்.

அந்த ‘மனிதனை’க் காண்பதற்காகவே உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன். அந்த வெள்ளை மாளிகையில், ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார். ‘மனிதன்’ எனும் ஏடு எழுதி உள்ள இர்விங் வாலஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, எனக்கு ஒரே ஆவல், அதை உன்னிடம் கூற வேண்டும் என்று.

ஒரு கருப்பு மனிதர் வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து, ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்? துணிந்து, ஆனால் தூய நோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கேகூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள் நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல், ஒரு கருப்பரை குடி அரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.

‘நீக்ரோக்கள்’ மனித இனத்திலே தாடிநந்தவர்கள்; அமெரிக்கர்களை விட மட்டம்; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர், அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை!

‘நீக்ரோக்கள்’ அமெரிக்கரின் உடைமைகள்’; எனவே, அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை. சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா? என்ற பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா!

‘என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பைமேட்டிலும் வீசுவேன். இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!’’ என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்கிரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா?

அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமை பெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்த நிலை இருந்தது. தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல நுhல்களில் ஒன்று, ‘டிரம்’ (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது!

‘டிரம்’ என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் அரசாளும் உரிமை பெற்ற மரபினன்கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள், அமெரிக்கப் பண்ணையாருக்கு! அமெரிக்காவில் பருத்தி, கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும், கண்ணீரும்கூடத்தான்.

அப்படி ஒரு பண்ணையில் ‘டிரம்’ பாடுபட்ட சோகக் காதைதானே இது என்று எண்ணுகிறாயா தம்பி? அதுதான் இல்லை. இந்த ‘டிரம்’ வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில். விளங்கினாலோ, வேதனை உணர்ச்சி அடங்க நெடுநேரம் பிடிக்கும்.

ஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து, அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள். கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம். அப்போது அவர்கள் வியாபாரிகள். கடலிலே வலைவீசி மீன்பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லையா, மான்களையும், காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.

விலை கொடுத்து வாங்கிய அடிமை, உழைத்து உழைத்து ஓடாகி உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்துபோய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாக ஆக, இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டு வந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது. புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாக ஆக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்துகொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்துகொண்டே வந்தது.

அதிகச் செலவு, வலிவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவில இருந்து புதிது புதிதாக, தொகைதொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, அமெரிக்காவிலே இடம் பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? "அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே ‘பிறப்பு’ அதிகமானால், புதியபுதிய அடிமைகள் கிடைப்பார்கள் அல்லவா?" என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, ‘நீக்ரோ உற்பத்திப் பண்ணை’ அமைத்தான்.

கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள், தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும், தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதைவிட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படிச் செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.

நீக்ரோப் பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல், வேளா வேளைக்கு உணவு அளித்துத் தனி விடுதிகளில் இருந்திடச்செய்து, அதுபோன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்திரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையானால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிறவரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது, குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது, இப்படி ஒரு பண்ணையை நடத்தினான் அந்தப் பாதகன்.

கணவன்-மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய்-மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்பட விடுவதில்லை. ஆண்-பெண்-குழந்தை என்ற ஒரு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட அடிமை என்றால், கிராக்கி அதிகம். பேசிக்கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழையகோட்டைக் காளை, மூரா எருமை என்று ‘ரகம்’ பற்றி. அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!

இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி, ‘முரசு’ என்ற நீக்ரோ வாலிபன், அடிமைச் சந்தைக்கு ஆட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக! அவன் பட்டபாடு, அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டு இருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை. நீக்ரோக்கள் விசயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக்காட்ட மட்டுமே டிரம் பற்றிய நூலினைக் குறிப்பிட்டுக் காட்டினேன்.

அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா? ‘மனிதன்’ எனும் நூல் அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும், ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

”தொலைநோக்குச் சிந்தனையும், வரும்பொருள் உரைக்கும் வல்லமையும், புதுயுகத்தில் விளைய வேண்டிய மாற்றம் பற்றிய வேட்கையும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சின் அலைகளைத்தான், தம்பிக்குத் தந்த மடலில் கண்டீர்கள். அவரது கருத்துகள், நம் இதயச் சுவர்களில் கல்வெட்டுகள் அன்றோ!

அண்ணா அன்று சொன்னதும், இன்று நடப்பதும், வெள்ளை மாளிகையில் மணிமகுடத்தில் ஒரு கருப்பு வைரம் ஒளிவீசும் நிலை மலர்வதும், நம் சிந்தனைச் சமவெளியில் பாயும் தேனாறு! சந்தன வாசம் வாரி வரும் பூந்தென்றல்! தழுவிடும் தென்றலில் திளைப்போம்!

உலகத்தின் கவனத்தை ஒருசேர ஈர்த்து இருக்கின்ற இன்றைய பாரக் ஒபாமா தேர்தல்களம் குறித்தும், கண்ணீர்க் காவியமான அன்றைய கருப்பர்களின் வாழ்வு குறித்தும் தொடர்ந்து உங்களுக்கு மடலாகத் தருவேன்.

தொடரும்...

Tuesday, January 29, 2008

வைகோ உயிரை ராஜீவ் காந்தி காத்தாரா?

திங்கள்கிழமை, ஜனவரி 28, 2008

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.

இன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

வைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

அவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2008/01/28/tn-vaiko-owes-his-life-to-rajiv-gandhi-congress.html

Monday, January 14, 2008

பொங்கல் : வைகோ வாழ்த்து!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொங்கல் புத்தாடைக்கு வழி இன்றி, வீட்டுக்குப் புதுச் சுண்ணாம்பு பூசக் காசு இன்றி, அவதிப்படும் அவலம். மின் வெட்டாலும், உரத் தட்டுப்பாட்டாலும், பயிர்க்கடன் வழங்காகக் கொடுமையாலும், தங்கள் விளைபொருளுக்கு லாபகரமான விலை இன்றியும் துயர்ப்படும் விவசாயிக்கு, இந்தத் தைத்திருநாளுக்குப் பின்னராவது, வேதனை தீரட்டும் விடியல் உதிக்கட்டும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும் இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: வைகோ

சென்னை, ஜன. 13: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை.
அலங்காநல்லூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டில், காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை -வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக் காளையர் காயமடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் எந்த வீரப் போட்டியிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.

இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேற்கத்தியக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்றன. இன்றைய சூழலில், தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியது. இதன் விளைவாகவே தைப்பொங்கல் பண்டிகை வேளையில் இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: வைகோ கண்டனம்

சென்னை, ஜன. 13: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரதமருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தனுஷ்கோடி அருகில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்பவர் குண்டுக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.